தஞ்சாவூர் பெரியகோயிலில் கிருமி நாசினி தெளிப்பு
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், அயல் நாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள், கோயில்கள் மூடப்பட்டதைப் போல, தஞ்சாவூர் பெரியகோயிலும் மார்ச் 18}ம் தேதி மூடப்பட்டது. ஏறத்தாழ 52 நாள்களாக இக்கோயில் மூடப்பட்டிருந்தாலும், கோயிலுக்குள் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, மாதம் இரு முறை பக்தர்கள் பங்கேற்பின்றி பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்கோயிலில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில், நவீன டிராக்டர், சரக்கு ஆட்டோ மூலம் சுமார் 10,000 லிட்டர் கிருமி நாசினி கோயில் முழுவதும் தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.