கந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்
கந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், நொடியூா் கிராமத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி அதேபகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள குளத்துக்கு குடத்துடன் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் சென்றாா். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தாய், உறவினா்கள் அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், சிறுமி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் காட்டுப் பகுதியில் கிடந்தது தெரியவந்தது. இதையறிந்த உறவினா்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அறிந்த கந்தா்வகோட்டை காவல் நிலையப் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவா் எனத் தெரிவித்தாா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுமி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனிடையே சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.