பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 464 பேருக்கு ரூ.55.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பவானி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை மற்றும் பட்லூர் தொடக்க வேளாண்மைக் கடன் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 464 பயனாளிகளுக்கு ரூ.55.68 லட்சம் மதிப்பில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 1.50 லட்சம் பேருக்கு பல்வேறு உதவித் தொகைகளும், ஓய்வூதியமாக ரூ.17 கோடியும் வழங்கப்படுகிறது. பவானி தொகுதியில் 35 ஊராட்சிகள், 6 பேரூராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 464 பேருக்கு முதியோர், விதவை உதவித் தொகை உத்தரவுகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான ரூ.55.68 லட்சம் மதிப்பிலான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் சி.ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.சரவணபவா (அம்மாபேட்டை), எஸ்.எம்.தங்கவேலு (பவானி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.