திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த மயிலுக்கு செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் ஈமச் சடங்கு செய்து, கண்ணீர் விட்டுக் கதறி அழுது வணங்கினர்.
மணப்பாறை அடுத்த பழைய காலணி என்னும் பகுதியில் மயில்கள் அதிக அளவில் உணவிற்காகவும், குடிநீருக்காகவும் குடியிருப்பு பகுதியில் அடைக்கலம் புகுந்துள்ளன. அந்த மயில்களுக்கு அப்பகுதி மக்கள் தினமும் தண்ணீர் வைத்து, இரை அளித்தும் வருகின்றனர். மயில்கள் வீடு தேடி வந்து இரை எடுத்துக்கொள்கின்றன.
மேலும், இரை வைத்து அழைத்தால் அழைப்பிற்கு செவிசாய்த்து பெண்கள் அமர்ந்திருக்கும் அருகிலேயே வந்து மயில்கள் இரை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மேலிருந்து தவறு விழுந்த மயில், நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்து நிகழ்வித்திடலேயே உயிரிழந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள், உயிரிழந்த மயிலை வேப்ப மரத்தடி வழிபாடு இடத்தில் வைத்து கற்பூரம் ஏற்றி, மஞ்சள் தண்ணீர் தெளித்து ஈமச் சடங்குகளைச் செய்தனர்.
அப்போது மயில்களுக்கு உணவளித்து வந்த பெண் ஒருவர், கண்ணீர் விட்டுக் கதறி அழுது உயிரிழந்த மயிலுக்கும் முன் தரையில் தொட்டு வணங்கினர். அப்பகுதி மக்களும் மயிலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த மயிலின் உடல் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின் மயில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.