தீயணைப்புத் துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்
தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை: தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):-
குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த எம்.எஸ். ஜாஃபர் சேட் ஐபிஎஸ், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை டாக்டர் சி. சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத் துறை டிஜிபி பதவி தற்போது ஜாபர் சேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜாபர் சேட் ஐபிஎஸ் இதுவரை வகித்து வந்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பதவியை, இனி சென்னை ரயில்வே துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு கூடுதலாக கவனிப்பார்.
மத்திய அரசன் அயல் பணியில் இருந்த ஏ.டி. துரைக்குமார் ஐபிஎஸ் சென்னை காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.