கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும்: விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம், கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம், கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.5 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
ஐரோப்பாவில் நாள்தோறும் 2.5 லட்சம், அமெரிக்காவில் நாள்தோறும் 1 லட்சம் என வளர்ந்த நாடுகளிலேயே இன்னும் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில்கூட நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
சர்வதேச அளவிலான சிறப்பு சிகிச்சைகளை தமிழக அரசு வழங்குகிறது. இதனால், பலி எண்ணிக்கை ஒருநாளைக்கு 30 என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு 10 மணி நேரத்தில் முடிவுகள் வருகின்றன. மற்ற இடங்களில் பரிசோதனை முடிவு வர 3 முதல் 5 நாள்கள் வரை ஆகிறது.
தமிழகத்தில் முதன்முதலாக ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தொடங்கி தற்போது 203 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 கோடி பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளோம்.
களத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல், அலுவலகங்களில் ஒன்று கூடுதல் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும். இரண்டாவது அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம்."