நவ.11 முதல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
முன்னதாக நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வீரகனூர் (சேலம்), தென்காசி, செங்கோட்டை (தென்காசி) ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.