நிவர் புயலால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து கதிர் முற்றி இன்னும் இருபது நாள்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில் நிவர் புயல் காரணமாக அதிக அளவில் காற்று வீசியதால் வயல் வெளியில் இருந்த நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
நெல் வயல்களில் நெற் பயிர்கள் சேதம் அடைந்து கிடப்பதை கண்டு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு வேளாண்துறை அதிகாரிகள் மூலம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.