சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடும் உயர்வு
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இங்கு 12,283 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இங்கு 12,283 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகபட்சமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் தலா 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிக நகர், அடையாறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனாவுக்கு பலியானோரில் தேனாம்பேட்டையில்தான் அதிகளவாக 422 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் 9.6 சதவீதம் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.
Advertisement
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அதேபோல், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.
2.7 சதவீதம் அதிகரிப்பு: சென்னையில் நோய்த்தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 12 மண்டலங்களில் நோய்த் தொற்று சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9.6 சதவீதம் அதிரித்துள்ளது. தண்டையாா்பேட்டையில் 5.7 சதவீதமும், மாதவரத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூரில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகரில் 4.1 சதவீதமும், அம்பத்தூரில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதமும், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 2.7 சதவீதமும், அண்ணா நகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
அதேவேளை, சோழிங்கநல்லூா் மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் 1.1 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், பெருங்குடியில் 0.5 சதவீதமும் நோய்த்தொற்று குறைந்துள்ளது. சென்னையில் கடந்த வாரத்தில் நோய்த் தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, கடந்த 7 நாள்களில் மட்டும் 9,134 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா்: 1,348
மொத்த பாதிப்பு: 1,72,773
குணமடைந்தோா்: 1,57,216
சிகிச்சை பெறுவோா்:12,283
உயிரிழந்தோா்: 3,274