வேளாண் மசோதாவிற்கு எதிராக திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர்: ஜி.கே. வாசன்
மறைந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு முதலியார் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள வேளாண் திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக திமுகவினர் அரசியல் செய்து வருவதாகவும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதன் பிரதிபலிப்பு தெரிய வரும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை சோளிங்கரில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு முதலியார் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் திட்டப் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு இறுதியாக என்னிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், கைத்தறி நெசவுத் தொழில் செய்பவர்களுக்கும் இலவசக் காப்பீடு வசதி, புதிய அரசு கலைக் கல்லூரி என பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன்வைத்துள்ளார்.
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றித் தர கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகிறார்கள். கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. தொடரும். கட்சியில் பலத்தைப் பொருத்து இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
கூட்டணியில் தேசியக் கூட்டணி எனில் அதன் தலைமையும், மாநிலக் கட்சி எனில் அதன் தலைமையும் வெளியிடும் வேட்பாளர் சார்ந்த அறிவிப்பே உறுதியாக இருக்கும்.
இந்திய அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டங்களை பலப்படுத்தி குற்றம் புரிந்தவருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கிலிட வேண்டும்.
விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதன் பிரதிபலிப்பு தெரியவரும் என்று தெரிவித்தார்.