அரசுப் பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நாடே எதிர்பார்க்கிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்க
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நாடே எதிர்பார்க்கிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பிற நாடுகள், மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும்கூட தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள்தான் உள்ளது.
பண்டிகைக் காலம், மழைக் காலம் தொடங்க உள்ளதால் இனிதான் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தவறாமல் முகக்கவசம் அணிவதும், உரிய இடைவெளியைப் பின்பற்றினாலே 2ஆம் கட்ட கரோனா பாதிப்பை தவிர்த்துவிடலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடியும் இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது.
இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். அதனால் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்.
ஓபிசி-க்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
ரெம்டெசிவர், லோபினாவிர், ரிட்டோனாவிர் போன்ற கரோனாவுக்கான மருந்துகள் ஆரம்ப நிலையில் நல்ல பலனை அளிக்கிறது.
நோய்த் தன்மை தீவிரமடைந்துள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் பயன் அளிக்கவில்லை என்ற ஐசிஎம்ஆரின் கருத்திலும் நாங்கள் உடன்படுகிறோம் என்றார் விஜயபாஸ்கர்.
அதிமுக அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரத்தினசபாபதி, மாவட்டச் செயலர் பி. கே. வைரமுத்து உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.