மதரை, திருமங்கலத்தில் குடும்பத்தகராறு காரணமாக தம்பியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் செங்குளம் ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் மருதன். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி பிச்சை. இவர்களுக்குப் பாண்டியராஜன் (28), சின்னத்துரை (26), தினேஷ்குமார் (23) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் பாண்டியராஜன் சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது கரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்து திருமங்கலம் வந்துவிட்டார். தினேஷ்குமார், பி.இ நான்காம் ஆண்டு மாணவர். சிறுவயதிலிருந்தே பாண்டியராஜனுக்கு தினேஷ்குமாரைப் பிடிக்காதாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாடியில் தினேஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது பாண்டியராஜ் வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷ்குமார் தலையில் போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் குமாரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது தலையில் பலத்த காயம் அடைந்திருந்தார்.
உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருமங்கலம் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாண்டியராஜனை தேடி வருகின்றனர்.