உடுமலையில் சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் வீடு புகுந்து 37 பவுன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை நகரை ஒட்டியுள்ள போடிபட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (70). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரும் இவரது மனைவியும் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ராஜகோபால் மனைவியியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 37 பவுன் நகையை கொள்ளையர் பறித்துக் கொண்டனர்.
மேலும் ராஜகோபாலை தாக்கி பீரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையர்கள் இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் கிடைத்தவுடன் கோவையிலிருந்து வந்திருந்த மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை போலீசார் இந்த துணிகர கொள்ளை குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.