முகப்பு
தமிழ்நாடு

பாமக நிறுவனர் ராமதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கு: ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உத்தரவு

முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள இடம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸூக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆர்.எஸ்.பாரதி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.  முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, இந்த விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மீது எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பாமக நிறுவனர் ராமதாஸ்  மார்ச் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இந்து வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  ராமதாஸ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் யாரும் ஆஜராகாததால், ஆர்.எஸ்.பாரதி தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →