முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே. பழனிக்கு கரோனா பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:


சென்னை: கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி(57) உள்ளார். இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் கே.பழனி மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க போடப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண  பொருள்களை தினமும் ஒரு பகுதியில் வழங்கி வந்தார். 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கே.பழனி உடல்சோர்வால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் அன்றே கரோனா பரிசோதனை செய்ததாகவும், இதில் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருவதாக அதிமுகவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இருந்த போதிலும் எம்எல்ஏ கே.பழனி கரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை  சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.