ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பெற வருகிற 9-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வது அவசியம் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில், மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
மருத்துவமனை மூலம் கரோனா பரவுவதைத் தவிா்க்க, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வருகிற 9-ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் முன்பதிவு செய்து, தொலைமருத்துவ ஆலோசனைக்குப் பிறகே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும்.
வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோா் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம். மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகள், எப்போதும்போல முன்பதிவின்றி தொடரும்.
முன்பதிவுக்கான தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களை ஜிப்மா் இணையதளத்தில் பெறலாம். மேலும், ‘ஹலோ ஜிப்மா்’ என்ற ஆண்ட்ராய்டு செயலியின் உதவியுடனும் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த நோயாளிகளை அவா்கள் பதிவுசெய்துள்ள செல்லிடப்பேசி எண்ணில் மருத்துவா் தொடா்புகொண்டு, தேவைப்படுவோருக்கு மட்டும் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தியை அனுப்பி வைப்பாா்.
இதையும் படிக்கலாமே.. தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
நாளொன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவா். மருத்துவமனைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். முன் அனுமதிக்கான செல்லிடப்பேசி குறுஞ்செய்தியை உறுதி செய்த பின்னரே அனைவரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவா். ஒரு நோயாளியுடன் ஒரு நபா் மட்டுமே மருத்துவமனைக்குள் செல்லலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.