முகப்பு
தமிழ்நாடு

மே 1 ஊரடங்கு அவசியமில்லை; 2-ல் ஏற்கனவே ஊரடங்கு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
மே 1 ஊரடங்கு அவசியமில்லை; 2-ல் ஏற்கனவே ஊரடங்கு: தமிழக அரசு தகவல்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கு அவசியமில்லை என்றும், 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

தொழிலாளர் தினத்துக்கு பொது விடுமுறை என்பதால், மே 1-ஆம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அன்றைய தினம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால், முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதி முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →