முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்: சென்னை ஆணையர் விளக்கம்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021, 06.04.2021 அன்று நடைபெற்றதை தொடர்ந்து 02.05.2021 அன்று சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணுதல் பணி இராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது.
தற்பொழுது கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அனைவரும் கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, கரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 02.05.2021 அன்றைய வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு அம்மா மாளிகை கூட்டரங்கில் 29.04.2021 அன்று நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாமும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாமில் 155 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, 911 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்று தேர்தல் செய்தி சேகரிப்பில் பணியாற்றிய ஊடகத் துறையினருக்கு மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே கரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்பொழுது வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ள இரண்டு தவணை தடுப்பூசி எடுக்காத நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு முகாம் 29.04.2021 அன்று நடத்தப்பட்டு 153 நபர்களின் தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.