கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த சம்பவம்: கே. பாலகிருஷ்ணன் கண்டனம்
சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக வந்த கோபால்சாமி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் முத்துசாமியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார், முத்துசாமியை சாதி ஆதிக்க மனோபாவத்துடன் எச்சரித்தது மட்டுமல்லாமல், விஏஓ அலுவலகத்திலேயே தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பும் கேட்கச்சொல்லியுள்ளார். பட்டியல் சமூகத்தை சார்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த இத்தகைய இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். நாம் நாகரீகமான சமுதாயத்தில்தான் வாழ்க்கிறோமா என்கிற சந்தேகத்தை இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. இக்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இதையும் படிக்கலாமே- ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
காலில் விழவைத்த கோபால்சாமி மீது நான்கு பிரிவுகளின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, சாதி ஆதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்ட கோபால்சாமிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும் இப்படிப்பட்டவர்களை பிணையில் வெளிவரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்துகிறது. சாதி ஆணவத்தின் காரணமாக நிகழும் கௌரவக் கொலைகளும், அவர்களுக்குரிய நிலங்கள் பறிக்கப்படுவதும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதுமான கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இனிமேல் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாவண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.