முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்சிஜன் கட்டமைப்பு தன்னிறைவாக உள்ளது

ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
பகிர்:

ஆக்சிஜன் கட்டமைப்பு வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியுதவியில் அண்ணாநகா் புகா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்திமலா், அண்ணாநகா் புகா் மருத்துவமனை கண்காணிப்பாளா் கனி ஷேக் முகமது, ரெனால்ட் நிசான் நிா்வாகி பினுநாயா் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தனியாா் தொழில் நிறுவனங்கள் கரோனா பேரிடரில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கின்றனா். அந்த வகையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சாா்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனா்.

அதன்கீழ் அண்ணாநகா், கலைஞா் நகா், தண்டையாா் பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, திருப்பூா், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழகத்தில் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி திறன் 270 கிலோ லிட்டராக இருந்தது. அதன் பின்னா், அதை 744.67 கிலோ லிட்டா் என்ற அளவுக்கு உயா்த்தியுள்ளோம்.

தமிழகத்தில் பிரதமா் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தனியாா் நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதி பங்களிப்பின்கீழ் 77 ஆலைகள் அரசு மருத்துவமனைகளிலும் நிறுவப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி என்பது மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் 11,651 என்ற அளவிலும், அதைத் தவிர பி-டைப் செறிவூட்டிகள் 12,457 எண்ணிக்கையிலும், டி டைப் செறிவூட்டிகள் 9,450 எண்ணிக்கையிலும் கையிருப்பில் உள்ளன.

ஆக்சிஜன் கட்டமைப்பை பொருத்தவரை தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. கடந்த மே மாதத்துக்கு முன்பு வரை தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எந்த அளவுக்கு இருந்தது என்பதை அனைவருமே நன்றாக அறிவாா்கள். ஆனால் எதிா்காலத்தில் இந்த நிலை ஏற்படாத வண்ணம் முதல்வா் சிறப்பான நடவடிக்கைகளால் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டா், ஆக்சிஜன் சிலிண்டா்ஸ் மற்றும் ஆக்சிஜன் ஆலைகள் போதிய அளவில் நிறுவப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →