ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மெரினாவில் இருந்து திரும்பிய எடப்பாடி பழனிச்சாமியின் காரை அமமுகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.
இதனால் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சமாதானம் செய்து எடப்பாடி பழனிச்சாமியின் காரை வழி அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீது காவல்நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- கடந்த 4 1/2 ஆண்டுகளில் 4 1/2 லட்சம் வேலைவாய்ப்புகள்: ஆதித்யநாத்
இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டரில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக செய்தி பார்த்தேன். பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் புத்தி எங்களுக்கு கிடையாது.
அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மாவும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது.
இன்றைய தினம் அம்மாவின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.