சென்னை: நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது - சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும்.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்
அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிறந்த மருத்துவ சேவைக்காக - தமிழ்நாடு அரசின் ஔவையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.