நாமக்கல்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது; ஆறுமாதத்தில் 557 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளன என்றார் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி.
மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வராத திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி. தங்கமணி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை ரூ .10 வரை குறைத்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக அரசு பெயரளவுக்கு ரூ.4, ரூ.5 என்ற அளவில் குறைத்து விட்டு விலையை குறைத்ததாக மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. காவல்துறைக்கே உரிய பாதுகாப்பு இல்லை. கடந்த ஆறு மாதத்தில் 557 கொலைகள் நடந்துள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள்.
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்பது நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர்,ஜெயலலிதா வழியில் வந்த அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
என்னுடைய வீட்டில் நடந்த சோதனைக்கு தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிதான் காரணம். அவருடைய சுயரூபம் திமுகவுக்கு தெரியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் போக போக அவரை பற்றி தெரிந்து கொள்வார்.
நடைபெறவுள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுகவுக்கு நாம் யார் என்பதை காட்ட வேண்டும். அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.