முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்

நாமக்கல் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
நாமக்கல் அருகே பெருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்கள்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் சுமார் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக ஜோதி என்பவரும், வகுப்பு ஆசிரியையாக ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்தனர். 

ஈராசிரியர் பள்ளி என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அவர்களுக்குள் இருக்கும் மோதல் மாணவ, மாணவிகளை பாதிப்படைய செய்தது. மேலும் தலைமையாசிரியை மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிற்க்கு தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியைக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்தனர். 

நாமக்கல் அருகே பெருமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

இதனைத் தொடர்ந்து இரு ஆசிரியைகளையும் இடமாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, தலைமையாசிரியை ஜோதி கரட்டுப்பட்டி தொடக்கப் பள்ளிக்கும், மற்றொரு ஆசிரியை ராஜேஸ்வரி கொடிக்கால்புதூர் தொடக்க பள்ளிக்கும் மாறுதல் செய்யப் பட்டனர். 

இந்த தகவல் தெரியவந்ததை அடுத்து மாணவர்கள், அவர்களது பெற்றோர் பள்ளி நுழைவாயில் முன்பாக அமர்ந்து ஆசிரியை ராஜேஸ்வரியை இடமாற்றம் செய்யக் கூடாது என தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் த.ராமன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்ள சமாதானப்படுத்தினர். ஆசிரியை இடமாறுதல் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →