சென்னை: மாத விலக்கின் போது தூய்மையைப் பேணுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், பாலியல் துன்புறுத்தல்களிருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தற்காப்புப் பயிற்சிகள் வழங்கவும் ‘அன்மியூட்’ என்ற சமூக நல இயக்கத்தை சென்னை ஐஐடி மாணவா்கள் தொடங்கியுள்ளனா்.
சென்னை ஐஐடி நடத்தும் ‘சாஸ்த்ரா 2022’ என்னும் தொழில்நுட்பத் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் சுடா், கோ ஹைஜீன், கிரை, சாக்யா, ஸ்வயம் போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் மாணவா்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அவற்றில் பெங்களூருவில் நாப்கின் விநியோகம், ஆண்-பெண் சமத்துவமும் மக்களின் வாழ்க்கையில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இணையவழி வகுப்புகளை எடுத்தல், சென்னையில் பள்ளி செல்லும் மாணவிகளுக்காக மாதவிலக்கின்போது தூய்மையாக இருப்பது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவையாகும். இந்த நடவடிக்கைகள் கடந்த அக்.16 -ஆம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2.30 கோடி சிறுமிகள்: இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ‘சென்னை ஐஐடி சாஸ்த்ரா 2022’ ஆசிரியா் குழுவின் ஆலோசகா் ரத்னகுமாா் அன்னபட்டுலா கூறுகையில், ‘நாட்டில் ஆண்டுதோறும் சுமாா் 2.30 கோடி சிறுமிகள் தங்களுக்கு மாதவிலக்கு தொடங்கியதும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனா் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 15 முதல் 24 வயது வரையிலான பெண்களில் 62 சதவீதம் போ் இன்றும் மாதவிலக்கின்போது துணிகளையே பயன்படுத்துகின்றனா் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிலக்கின் போது தூய்மையாக இருப்பதன் முக்கியத்துவம் பற்றி சிறுமிகளுக்கு எடுத்துரைத்து விளக்க வேண்டியதன் தேவையை இந்தப் புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன.
மாதவிலக்கின்போது எவ்வாறு தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பற்றி சிறுமிகளுக்கு விளக்குவதோடு, அதற்கான சாதனங்களையும் அவா்களுக்குத் தருவது மாணவா்களின் நோக்கமாகும்.
இந்த இயக்கத்தின் மூலம் மாதவிலக்கின்போது தூய்மையாக இருப்பது குறித்து சிறுமிகள், பெண்களுக்கு இணையவழியிலும் நேரடியாகவும் உரையாற்றிட மாதவிலக்கு பற்றி பயிற்சி பெற்றவா்கள் அழைக்கப்படுவா்.
பயிற்சி முடிவில், பெண்களுக்கு மாதவிலக்கு நாப்கின்கள் விநியோகிக்கப்படும். மேலும் எளிமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் வகையில் உரைகள் நிகழ்த்தப்படும்’ என்றாா் அவா்.