காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இரண்டடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தை முருக பக்தர் ஒருவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் காணிக்கையாக வியாழக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் முனுசாமி முதலியார் அவின்யூவில் வசித்து வருபவர் மு.வேலாயுதம்(85). காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு அவர் வசிக்கும் முனுசாமி முதலியார் அவின்யூவில் 2860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இந்த இடத்தை தனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக கொடுப்பதாக பத்திரப்பதிவு செய்து அப்பத்திரத்தை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குமரன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் வரவேற்று பேசினார். 2 கோடி மதிப்பிலான சொத்தை தானமாக வழங்கிய மு.வேலாயுதத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு சால்வையும், மாலையும் அணிவித்து கௌரவித்ததுடன் நன்றியும் தெரிவித்தார்.
நிறைவாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் நன்றி கூறினார்.