விழுப்புரம்: தமிழகத்தில் 2-ஆவதாக விழுப்புரத்தில் அருகே தந்தை பெரியார் நகரில் சமுதாய நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் என்ற திட்டத்தை கடந்த 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் அறிவித்தார்.
இதன்படி திருச்சியில் சமுதாய நூலகம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகரில் சமுதாய நூலகம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தந்தை பெரியார் நகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் விழுப்புரம் மாவட்ட மைய நூலக நூலகர் ம.இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
திரைப்பட உதவி இயக்குநர் கமலேஷ்ராம், அஞ்சல் துறை அலுவலர் க.மகேஸ்வரன், விரிவுரையாளர் குண.பாரி, அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ச. கார்த்திக் ஆகியோர் நூலகத்தின் சிறப்புகள் குறித்து பேசினர்.
காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், நூலகர் வேல்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தை பெரியார் நகர் குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர். ம. சபாபதி நன்றி கூறினார்.
சமுதாய நூலகம் என்ற இந்த திட்டத்தின் மூலம் திறக்கப்பட்ட இந்த நூலகத்தில் முதல் கட்டமாக நூலகத்துறை சார்பாக 500 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.