பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்து வருகிறது: ப.சிதம்பரம் பேச்சு
மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மானாமதுரை: மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மானாமதுரையில் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியதாவது:
மத்திய பாஜக அரசாலும் மாநில அதிமுக அரசாலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியினர், கட்சியை வலுபபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு தவறான நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இனி வரக்கூடிய காலங்களிலும் இந்த சரிவு நிலை மேலும் உயரும்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண மக்கள் பயனடையும் வகையில் எந்த ஒரு அம்சமும் இல்லை. பணக்காரர்கள் எழுதிக் கொடுத்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்துள்ளார்.
இந்த பட்ஜெட் மூலம் நாட்டில் விலைவாசி உயரக்கூடும். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் டாக்டர் செல்வராஜ், காங்கிரஸ் நகர் தலைவர் எம்.கணேசன் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் சஞ்சை காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.