ஜன. 27-இல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1994- 1995-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் சில தொகையைத் குறிப்பிடவில்லை. இதை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு எதிராக உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்தது. இதை எதிா்த்து வருமான வரித்துறை ஆணையா் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவா் வெளியே வந்ததும் சில விளக்கங்களைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.