கலவை காய்கறி சாம்பார்
பொங்கலன்று காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.
பொங்கலன்று காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையானவை:
துவரம்பருப்பு - 100 கிராம், சேப்பங்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கை, பூசணி, பீன்ஸ், கேரட், கருணைக்கிழங்கு, வாழைக்காய், அவரைக்காய் ஆகியவற்றின் கலவை - கால் கிலோ, தக்காளி - 1, சின்ன வெங்காயம் -10, பூண்டு - 4 பல், புளி - கரைசல் சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி, வெந்தயத்தூள் - கால் தேக்கரண்டி, தனியாத்தூள் - 2 தேக்கரண்டி, சீரகம் - அரை தேக்கரண்டி, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
துவரம்பருப்பில் மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், தக்காளி, 2 சின்ன வெங்காயம் சேர்த்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சிறிது எண்ணெய்யில் பூண்டு, மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். இதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்துக் கலக்கவும். உப்பு, புளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து, கொத்துமல்லி தூவி இறக்கவும்.