அதிமுகவை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சி அமைப்பதே நமது இலக்கு என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை சென்னை மெரீனா கடற்கரையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, ''முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயரைப் பெற்றவர் ஜெயலலிதா.
இந்தியாவில் அதிக நாள்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற சிறப்பை பெற்றவர். தமிழக மக்களுக்கு தாயாக இருந்து திட்டங்களை அடுத்தடுத்து ஜெயலலிதா நிறைவேற்றி வந்தார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்த, சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா.
பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை வகுத்து, பெண்களின் முன்னேற்றத்திற்கு ஜெயலலிதா பெரிதும் உதவினார். பல்வேறு பெண்கள் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் விரும்புகின்றனர்.
ஜெயலலிதா தமது செயல்களால் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்டார் என்று ஜெயலலிதாவின் சிறப்புகளை பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் மு.க.ஸ்டாலின்.
அவர் தலைமையேற்றுள்ள திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என்று தொண்டர்கள் மத்தியில் முதல்வர் சூளுரைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.