காஞ்சிபுரம் பேராசிரியை கொலை வழக்கு: உடற்கல்வி ஆசிரியர் கைது
காஞ்சிபுரத்தில் தமிழ்ப்பேராசிரியை கொலை செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழ்ப்பேராசிரியை கொலை செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோயில் தெருவில் வசித்து வந்தவர் அனிதா(45). திருமணமாகாத இவர் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 9 -ஆம் தேதி அவர் வசித்து வந்த வீட்டின் முதல் தளத்தில் மயங்கிய நிலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் அனிதாவின் உறவினர்கள், அவர் பணியாற்றிய கல்லூரி ஆகிய இடங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய சுதாகர்(42) என்பவரை காவல்துறையினர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.ம.சத்தியப்பிரியாவும் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுதாகரே கொலை செய்திருப்பது உறுதியானதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர்.எம்.சுதாகர் கூறியது..
காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் மா.சுதாகருக்கும், அனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுதாகர் தான் கொலை செய்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்களும், சாட்சியங்களும் உள்ளதால் அவரை கைது செய்துள்ளோம். சுதாகர் திருமணம் ஆனவர். அனிதா திருமணம் ஆகாதவர் என்றும் எஸ்.பி.எம்.சுதாகர் தெரிவித்தார்.