மேக்கேதாட்டு அணை: தஞ்சையில் எடியூரப்பா உருவபொம்மை எரிப்புப் போராட்டம்
மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணைக் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை ந
தஞ்சாவூர்: மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணைக் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கர்நாடக அரசு கட்டுகிறது. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது.
எனவே, மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை அறிய உண்மை அறியும் குழுவைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும். தொடக்க நிலைப் பணிகள் நடைபெற்றால், அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து தடையாணைக் கேட்க வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை இடைக்காலத் தடையைக் கர்நாடக அரசுக்குப் போட வேண்டும்.
இப்பணியைத் தொடங்கக் கூடாது என கர்நாடக முதல்வருக்கு மத்திய நீர் வளத் துறைக் கடிதம் அனுப்பி, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழக அரசு நடத்த வேண்டும். கர்நாடகத்துக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தியும், தமிழர்களுக்கு எதிரான இன விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கர்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுதொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஏறத்தாழ 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.