தமிழ்நாடு

பப்ஜி மதனின் சொத்து விவரங்களை வெளியிட்டது சைபர் கிரைம்

DIN

சென்னை: சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த மதன், தர்மபுரியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் வெளியிட்டிருப்பதாக வந்த தகவலில், கைதான மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.4 கோடி பணம், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் தலா ரூ.45 லட்சம் மதிப்பில் இரண்டு சொகுசு வீடுகள், இரண்டு சொகுசு கார்கள், பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவரிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பப்ஜி மதனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் dcpccbi@gmail.com இந்த மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கலாம். அவர்களது பணம் மீட்டுத் தரப்படும். ரூ.5000 அளவுக்கு ஏமாந்திருந்தாலும் புகார் அளிக்கலாம். பணம் மீட்டுத் தரப்படும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா புதன்கிழமை கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பப்ஜி மதன் நேற்று கைது செய்யப்பட்டார்.

தருமபுரியில் கைது செய்யப்பட்டிருக்கும் மதன் சென்னை அழைத்து வரப்பட்டு, விசாரணைக்குப் பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்கிடையே மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது.

மதன் கைது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் இரு யூ-டியூப் சேனல்களை வைத்துள்ளார். இந்த யூ-டியூப் சேனல்கள் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவரது யூ-டியூப் சேனல்களை சுமார் 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசும் விடியோ, ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து வடபழனியைச் சேர்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.

சைபர் குற்றப்பிரிவு மதன் மீது ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மதனை, கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வந்தனர். அதேவேளையில் மதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இரு சேனல்களுக்கும் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் தலைமறைவாக இருந்த கிருத்திகாவை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

தர்மபுரியில் கைது:
இதற்கிடையே, மதன் முன்ஜாமீன் தாக்கல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுப்படி செய்யப்பட்டது. அதேவேளையில் சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், தர்மபுரியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர். அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா” ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மதனை காவல்துறையினர், சென்னைக்கு நேற்று அழைத்து வந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT