சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை காவலர்கள் கைது செய்தனர்.
திருப்பாச்சேத்தி, மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி கனிமொழி(25), இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கனிமொழி நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி காளீஸ்வரன் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காளீஸ்வரன் ஆத்திரமடைந்து அரிவாளால் கனிமொழியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி காவலர்கள் வழக்குப் பதிந்து காளீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.