திமுக வேட்பாளர் தமிழரசியை எதிர்த்து கட்சியினர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு?
மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தமிழரசியை எதிர்த்து திமுகவினர் சிலர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடுதிமுக வேட்பாளர் தமிழரசியை எதிர்த்து கட்சியினர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு?
மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தமிழரசியை எதிர்த்து திமுகவினர் சிலர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தமிழரசியை எதிர்த்து அதே கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத உள்ளூர் திமுகவினர் சிலர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மானாமதுரை(தனி) சட்டமன்றத் தொகுதி திமுகவிடம் இருந்து கைநழுவிப் போய் 30 ஆண்டுகள் ஆகிறது. இத்தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் இத்தொகுதியில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வெளியூரைச் சேர்ந்த இவருக்குத் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை எனப் புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் குணசேகரனிடம் தமிழரசி தோல்வியடைந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் சென்னையைச் சேர்ந்த சித்ரா செல்விக்கு போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. இவர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாரியப்பன் கென்னடியிடம் தோல்வியைச் சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தொகுதியைச் சேர்ந்தவருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தலைமைக்குத் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் வலியுறுத்தினர். அப்போது மானாமதுரை தொகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராகத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த இலக்கியதாசன் என்பவரை திமுக வேட்பாளராக கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகம் செய்து இதோ நீங்கள் கேட்ட உள்ளூர் வேட்பாளர் இவரை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
ஆனால் வழக்கம்போல் இலக்கியதாசனும் அதிமுக வேட்பாளர் எஸ் நாகராஜனிடம் தோல்வி கண்டார். கடந்த 30 ஆண்டுகளாக திமுகவிடம் இல்லாத மானாமதுரை தொகுதியை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றிய தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் உள்ளனர். வேட்பாளர் தேர்வின்போது திமுக தலைமை தொகுதியைச் சேர்ந்த திமுகவினருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கினால் தொகுதியை எளிதாக் கைப்பற்றி விடலாம் என கட்சியினர் திமுக தலைமையை வலியுறுத்தி வந்தனர்.
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் மனு செய்தனர். இவர்களில் மூன்றிலிருந்து ஐந்து நபர்களை தேர்வு செய்து போட்டியிடும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளூர் திமுகவினர் கூறி வந்தனர். இதற்கிடையில் வழக்கம்போல் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசிக்கு இரண்டாவது முறையாக மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதனால் மானாமதுரை சேர்ந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக தலைமை மானாமதுரை தொகுதியைக் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களுக்கு திமுக தலைமை ஒதுக்கி வருகிறது. இதனால் தொகுதியை மீட்போம் என சபதம் செய்து வந்த திமுகவினருக்கு தற்போது தமிழரசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது என மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் கூறி வருகின்றனர். இதற்கிடையில் தமிழரசி வேட்பாளராக அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத திமுக தலைமையிடம் போட்டியிட வாய்ப்பு கேட்டு வாய்ப்பு வழங்கப்படாத சில திமுகவினர் திமுக வேட்பாளரை எதிர்த்து மானாமதுரையில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்காக இவர்கள் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுச் சென்றுள்ளனர். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான தமிழரசியை எதிர்த்து திமுகவினர் போட்டியிடுவது அதிமுக வெற்றிக்கு சாதகமாகிவிடும் எனக் கூறப்படுகிறது.