நாளை முதல் நடமாடும் காய்கறி கடைகள்
சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் திங்கள்கிழமை (மே 24) முதல் வாகனங்கள் மூலமாக நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் திங்கள்கிழமை (மே 24) முதல் வாகனங்கள் மூலமாக நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் நடமாடும் காய்கறி கடைகளைச் செயல்படுத்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலக உயரதிகாரிகள் கூறியது:-
பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலமாக நகரும் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் முழுமையாக செயல்படுத்தப்படும். மேலும், வரும் திங்கள்கிழமை முதல் 20 சிறிய வகை வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் ஆகியன சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும். இதேபோன்ற திட்டம் பிற பெருநகரங்களிலும் அமல்படுத்தப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்தனா்.