முகப்பு
தமிழ்நாடு

மழை பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கியது. குடியிருப்புகளிலும் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புவனகிரி அருகே கீழ்ப்பரவனாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களை நேரில் பாா்வையிட்டனா். மேலும், தூா்வாரப்பாடத கீழ்பரவனாற்றைப் பாா்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். இதையடுத்து, சிதம்பரம் பூவாலை பகுதியில் சேதமடைந்த நெல் பயிா்களைப் பாா்வையிட்டனா்.

முன்னதாக, புவனகிரியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் சொரத்தூா் ராஜேந்திரன், நாக.முருகுமாறன், குமரகுரு, கலைச்செல்வன், பி.எஸ்.அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500 குடும்பங்களுக்கு அரிசி, பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட மழை நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை எடப்பாடி கே.பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் வழங்கினா். நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்டப் பொருளாளா் கே.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.