போடி: போடி மெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை மரம் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போடி பகுதியில் கடந்த மூன்று நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. தமிழகம்-கேரளத்தை இணைக்கும் போடிமெட்டு மலை பகுதியிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவும், சிறு சிறு பாறை சரிவுகளும் ஏற்பட்ட நிலையில் உள்ளது. திங்கள்கிழமை இரவில் ஏற்பட்ட மண் சரிவை சரி செய்த நிலையில், செவ்வாய்கிழமை இரவிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர்.
மண் சரிவு ஏற்பட்டுள்ள போடிமெட்டு மலைச்சாலை
இதையும் படிக்க | ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
இதனிடையே புதன்கிழமை அதிகாலையில் போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போடியிலிருந்து கேரளம் சென்ற தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டன.
தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் சாய்ந்து விழுந்த மரங்கள், மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.