திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் குமரன் சிலை முன்பாக பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து இதில், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மட்டும் அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்தது.
இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பின்னலாடை, விசைத்தறி, ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களின் நிலை கருதி, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்த அரசு குழு அமைக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதி பனியன் வியாபாரி சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், நிர்வாகிகள் மகேந்திரன் ரவி, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.