மின்னல் பாய்ந்ததில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் சாவு
சென்னை காசிமேடு அருகே கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மின்னல் பாய்ந்து இறந்தார்.
சென்னை: சென்னை காசிமேடு அருகே கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மின்னல் பாய்ந்து இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ராயபுரம் சிபி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ரா.தேசப்பன் (38). மீனவரான இவர், செவ்வாய்க்கிழமை காலை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார்.
அவர், காசிமேடு மீன் பிடி துறைமுகத்தின் பழைய மீன் ஏலம் விடும் பகுதியின் எதிரே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் பலத்த மின்னல், இடி ஏற்பட்டது. இதில் மின்னல் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தேசப்பன் மீது பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.
இதைப் பார்த்த அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த பிற மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், தேசப்பனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த காசிமேடு மீன்டி துறைமுக போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேசப்பன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.