அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ எனப் பெயரிட்டு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
- அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும் வகையில், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்.
- பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை வெளியிடுதல். பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை அதிமுக முன்னோடிகளுக்கு அணிவித்தல்.
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்களுடன், பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான லோகோவுடன் ஒரே மாதிரியான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப் பொலிவுடன் அமைத்தல்.
- அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்களும் அமைத்தல்.
- அதிமுக வளர்ச்சிக்காகத் தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்தப் பொன்விழா ஆண்டுமுதல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜிஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி, கெளரவித்தல்.
- அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, அதிமுக சார்பில் நடத்தப்படும் பொன்விழா மாநாட்டில் சான்றிதழும், பரிசும் வழங்கி சிறப்பித்தல்.
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை, அதிமுக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை “மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்'” என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்.
- தலைமைக் அலுவலகத்திற்கு “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை” என பெயர் சூட்டல்.
- அதிமுக பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினரை கெளரவித்து, உதவி செய்தல்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொன்விழா நினைவு நாணயம்/பதக்கம் வழங்குதல். உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்குதல்; பொற்கிழி அளித்தல்.
- எம்.ஜி.ஆர். பற்றியும், ஜெயலலிதா பற்றியும், அதிமுக பற்றியும் நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கெளரவித்தல்.
- எம்.ஜி.ஆர். மன்றங்களில் இருந்து அதிமுக பணிகளைத் தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்தல்.
- அதிமுக பொன்விழாவை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில், காலச் சுருள் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட விளம்பரப் படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்புதல்.
- அதிமுக பொன்விழாவை மேலும் சிறப்பித்திடும் வகையில், அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் பரிசீலனை செய்து, இந்தப் பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும்.