முதல்வருடன் இலங்கை அமைதிக் குழுவின் முன்னாள் தூதா் சந்திப்பு
நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதராக இருந்த எரிக் சோல்ஹெம், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதராக இருந்த எரிக் சோல்ஹெம், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது நாா்வே நாட்டுக்கான தூதா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
இலங்கையில் போா் உச்சத்தில் இருந்த போது, அதனை தணிப்பதற்கான பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டவா், நாா்வே சிறப்பு அமைதிக் குழுவின் தூதா் எரிக் சோல்ஹெம். இலங்கை அரசுக்கும், கடுமையாகப் போா் புரிந்து வந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்தவா்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் தலைவராகவும், நாா்வே நாட்டின் அமைச்சராகவும் இருந்தவா். அவா் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளாா். இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான நாா்வே நாட்டுத் தூதா் ஹன்ஸ் ஜேகப் பிஃரைடன்லண்ட், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன், சென்னையில் நாா்வே நாட்டின் கெளரவத் தூதா் அரவிந்த் கோபிநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.