நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல: ஆய்வறிக்கை
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக், மரணத்துக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது காரணமல்ல என்று தமிழக அரசின் விரிவான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக், மரணத்துக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது காரணமல்ல என்று தமிழக அரசின் விரிவான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் அவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் புரளி பரவியது. அதற்கு சுகாதாரத் துறை தரப்பில் மறுப்பும், விளக்கமும் அளிக்கப்பட்டது.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் விவேக் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்று தெரிய வந்துள்ளது. தடுப்பூசிக்குப் பிறகான பாதிப்புகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் நிபுணர்கள், விவேக் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த போது பெறப்பட்ட மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
Advertisement
அதில், விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. மரணம் ஒரு தற்செயல் நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக்கின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது. அடைப்பின் காரணமாக இதயத்தால் ரத்தத்தை செலுத்த முடியாமல் போனதால் இதய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருக்கு அசாதாரண இதயத் துடிப்பும் இருந்ததால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.