தில்லி பேரவைக்குள் அத்துமீறி புகுந்த கார்! பூங்கொத்து வைத்துவிட்டு தப்பிய ஓட்டுநர்!
தில்லி பேரவைக்குள் அத்துமீறி புகுந்த கார் பற்றி...
தில்லி சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயில் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவை வளாகத்துக்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப் பிரதேசம் பதிவெண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்துள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தும் நுழைவு வாயில் 2-ன் கதவை உடைத்து, சட்டப்பேரவைக்குள் கார் நுழைந்துள்ளது. பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா கார் அருகே பூங்கொத்தை வைத்துவிட்டு, மீண்டும் அதே வாயில் வழியாக வேகமாக வெளியேறிய அந்த கார் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் குற்றப்பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.
தற்போது மத்திய ஆயுதப் படைக் காவலர்களின் காண்காணிப்பின் கீழ் தில்லி சட்டப்பேரவை வளாகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் காரின் உரிமையாளரைக் காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.