சென்னையில் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து ஏன்? தவெக விளக்கம்!
சென்னையில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து....
சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று(ஏப். 6) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக காவல் துறையிடமும் அனுமதி கோரி கடிதமும் வழங்கப்பட்டது. ஆனால் வில்லிவாக்கத்தில் 12 மணி முதல் 1 மணி வரையிலும், தியாகராய நகர் தொகுதியில் 2 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டும் பிரசாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், வில்லிவாக்கத்திலிருந்து, தியாகராய நகருக்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியாது எனத் தெரிவித்து இன்றைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
Advertisement
இது குறித்து தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
”தியாகராய நகரில் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டோம். தேர்தல் அதிகாரி(ஆர்ஓ) உடனடியாக 2 மணி முதல் 6 மணி வரை பிரசாரம் செய்வதற்கு அனுமதி கொடுத்தார்கள்.
ஆனால் ஒரு மணி நேரத்துக்குள் அதனை ரத்து செய்து, அதை மாற்றி 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி என்கிறார்கள்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் செயல்படுகிறார்.
கரூர் போன்ற பிரச்னையை சென்னையில் உருவாக்க திமுக முயற்சி செய்கிறது. காவல் துறைக்கு நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்களின் பணியை நேர்மையாக செய்யுங்கள். இந்த ஆட்சி தொடரப்போவதில்லை.
சென்னை காவல் ஆணையர் அருணை மாற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.