தூத்துக்குடி: தூத்துக்குடி பக்கிள் ஓடையில் தவறிவிழுந்த கர்ப்பமான பசுவை,தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர்.
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் தவறிவிழுந்து கர்ப்பமான பசுவை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் பக்கிள் ஓடை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலம் நகரில் உள்ள கழிவு நீர் கடலில் கலக்கிறது. இந்த கால்வாயில் தடுப்பு சுவர் சில பகுதி தாழ்வாக உள்ளது. இதில் அடிக்கடி பசு மற்றும் கால்நடை தவறி விழுந்து உயிரிழந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியில் பக்கிள் ஒடையில் ஒரு கர்ப்பமான பசுமாடு தவறி ஓடையில் விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பசுமாட்டை மீட்க போராடினர். அருகே உள்ள மக்களையும் உதவிக்கு அழைத்தனர். மீட்க முடியாத நிலையில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பக்கிள் ஓடையில் தவறிவிழுந்து கர்ப்பமான பசுவை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியே தூக்கும் காட்சி.
தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சேர்ந்த பென்பாண்டிக்கு சொந்தமான இந்த கர்ப்பம் தரித்த பசுவின் வயிற்றுப் பகுதியில் கயிறுகட்டி மேலே இழுக்கும் போது வயிறு நசுங்குவதை பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
நகரின் மத்திய பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.