கரோனாவால் உயிரிழந்தோருக்கு நேரடியாக நிவாரணம்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்
கரோனா உயிரிழந்தோருக்கு மத்திய அரசு நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
கரோனா உயிரிழந்தோருக்கு மத்திய அரசு நேரடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா நோய்த் தொற்றால் இறந்து போனவா் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு கரோனாவால்
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் நிவாரண நிதியாக மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்துடன் கரோனா உயிரிழப்புக்கான வரையறைகளையும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மாநிலங்களின் நிதி வருவாயை பெருமளவு மத்திய அரசு வசப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் பொறுப்புக்கு மாநிலங்களை கைகாட்டி விட்டு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்து, கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பங்கள் அனைத்துக்கும் நிபந்தனையின்றி நேரடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.