மானாமதுரை ஸ்ரீவீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குள்பட்ட இக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கும் அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவருக்கும் காலை 8 மணிக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது.
அதன்பின் உற்சவர் வீர அழகருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் இரவு வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.
Advertisement
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அழகர் எதிர்சேவை வரும் 15ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும். மறுநாள் 16 ஆம் தேதி காலை வைகை ஆற்றுக்குள் அழகர் இறங்கும் உற்சவமும் நடைபெறுகிறது.
அதன்பின் 17-ஆம் தேதி இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.