வீட்டிற்குள் விழுந்த துப்பாக்கிக் குண்டு: சென்னை ஆவடியில் பரபரப்பு
சென்னை ஆவடியில் மேற்கூரையை துளைத்து வீட்டினுள் துப்பாக்கிக் குண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆவடியில் மேற்கூரையை துளைத்து வீட்டினுள் துப்பாக்கிக் குண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆவடி அருகே மிட்டனமல்லி எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் வியாழக்கிழமை ராஜேஷின் மனைவி ஜானகி குழந்தையுடன் ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராஜேஷ் தூங்கி உள்ளார். பின்னர், அவர் வெள்ளிக்கிழமை காலை எழுந்து வேலைக்கு செல்ல முயன்றார். அப்போது அவரது வீட்டு ஆஸ்பெட்டாஸ் கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கியின் தோட்டா வந்து வீட்டுக்குள் கிடந்தது. இதனைப் பார்த்த ராஜேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
Advertisement
அதே நேரத்தில் அங்கு விழுந்த தோட்டாவால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தோட்டாவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜேஷ் வீட்டருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையம் உள்ளது. அங்கு பயிற்சியின்போது காவலர்கள் பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்து தோட்டா தவறுதலாக வந்ததா? அல்லது வேறு எங்கிருந்தும் வந்து விழுந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டினுள் துப்பாக்கிக்குண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.